கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தாமஸ். இவரது மனைவி பேபி மனோரஞ்சிதம் வயது (62), இவர் அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இதனால் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் எதிரில் உள்ள சிமெண்ட் சாலையில் பேபி என்ற பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து தெருவில் உள்ள மாரிமுத்து என்பவரது வீட்டிற்கு கதவு மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை மினி லாரி மூலம் தியாகதுருவத்தில் இருந்து பழைய சிறுவங்கூருக்கு எடுத்துக் கொண்டு வந்தனர்.
பின்னர் இறக்கி விட்டு மீண்டும் பல்லகச்சேரி செல்வதற்காக கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் சென்ற போது அங்கு சிமெண்ட் சாலையில் படுத்து கொண்டிருந்த பேபி மனோரஞ்சிதம் மீது வாகனத்தின் முன் சக்கரம் ஏறி இறங்கி உள்ளது.
இதை அடுத்து, படுகாயம் அடைந்த மனோரஞ்சிதத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி மனோரஞ்சிதத்தை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது போலிசார் முதற்கட்ட விசாரணையில் வாகனத்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்து இருந்ததால் தான் விபத்தில் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.