இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு:- பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும்,
பானை தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழை பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில்,

வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்க கூடிய சூழ்நிலையில், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால்,
வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க இயலும். இவ்வாறு மண் எடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பல வரப்பெற்றுள்ளன.

தற்போது உள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டிற்கும், பானை தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண் எடுக்க மேற்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போது, மேற்கூறிய பிரச்சனைகளையும் களைந்து புதிய எளிதான நடைமுறையை வகுத்திட வேண்டும்.
இதுமட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்து கொள்ளவும், இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று,
தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.