முதலீடுகள், வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வ …

Sathya Bala
2 Min Read
டிடிவி தினகரன்

திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்பு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீடுகளும் அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதே போல கடந்த ஜனவரி மாதம் திமுக அரசு நடத்திய விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அந்த மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

டி.டி.வி. தினகரன்

ஆனால், இந்த மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியதாகவோ, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவோ தற்போதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை.

முந்தைய ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை காகிதப் பூ என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் மாநிலத்திற்கும் மக்களுக்கும் ஒருபோதும் பயன் தராத விளம்பரப் பூ என்பதை எப்போது உணர்வார்? என பொதுமக்களும் தொழில்துறையினரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம், எளிதில் அணுக முடியாத அரசு நிர்வாகம், தொழில் தொடங்க அடிப்படை கட்டமைப்பு இல்லாத பெருநகரங்கள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் என தங்கள் அரசின் குறைகளை மறைக்க திமுக அரசு நடத்திய விளம்பர மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவிலேயே இருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்புகள் குறித்தும், கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கையை விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாநாடு என்ற பெயரில் மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றும் முயற்சிகளை இனியாவது கைவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீடுகள் தேடி வரும் மாநிலமாக தமிழகத்தை மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review