குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 49 பேர் உயிரிழந்தனர். குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கட்டிடத்தின் சமையல் அறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதில், கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

கட்டிடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

சிலர் தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் கூறுகையில்;- இந்த கட்டிடத்தில் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் பலர் தங்கியிருந்தனர். தீயணைப்பு படையினர் உதவியுடன் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக புகையை சுவாசித்ததில் பலர் உயிர் இழந்தனர்’’ என்றனர். குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் பஹத் அல் யூசுப் அல் சபா தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காப்பாளர் ஆகியோரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே தீ விபத்தில் இந்தியர்கள் பலியானதாக வந்த தகவலையடுத்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் என்று வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
தீ விபத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இறந்துள்ளனர். குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவக்கோரி ஒன்றிய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குவைத் அரசுடன் சேர்ந்து இந்திய தூதரகம் உதவி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு,
விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அயலகதமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், குவைத்தில் நடந்த தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்து தொடர்பாக தகவல்களை கேட்டு பெற உதவ அவசர உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டோர் 965-65505246 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.