கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி. கோவை மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். கடந்த 17 ஆண்டுகள் கவுன்சிலராக பணியாற்றியவர்.

காங்கிரஸ் உடன் இருக்கும் கட்சி திமுக, இந்த கூட்டணி வெல்லும் கூட்டணி. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தமிழ்நாடு மக்கள் தனிப்பட்ட அன்பு கொண்டவர்கள். ராகுல் அவர்களே வருக, புதிய இந்தியாவிற்கு விடியல் தருக. இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.
இந்த தேர்தலில் ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான். திமுக வலியுறுத்தி வரும் சமூக நீதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்துள்ளது.

அப்போது ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய், நீட் விலக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு, இரண்டு மடங்கு கல்வி உதவி தொகை, புதிய ஜிஎஸ்டி சட்டம், வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு என மாநிலங்களுக்கும், நாட்டிற்கும் நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அளித்துள்ளார்.
வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டு டூர் வருகிறார். பிரதமர் மோடி ஊழல் பற்றி பேச வெட்கப்பட வேண்டும். ஊழல் யூனிவர்சிட்டிக்கு வேந்தராக இருக்க பிரதமர் மோடி தகுதியானவர்.

இடி, ஐடி, சிபிஐ போன்ற கூட்டணி அமைப்புகளை வைத்து மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கியுள்ளார்கள். கார்பரேட் முதலாளிகளுக்காக பாஜக அரசு நடத்துகிறது.
மோடி ஒரு வாசிங் மெசின் வைத்து ஊழல்வாதிகளை சுத்தப்படுத்துகிறார்கள். இது யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. நாம் இந்தியா கூட்டணி ஆள வேண்டும் என சொல்கிறோம்.

அவர் சிம்பிலி வேஸ்ட். 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவது போல, மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் என்ற திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தரப்போகிறோம்.
புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளார்கள். அப்போது சொல்லாதையும் செய்வோம் என்பதை காட்டியுள்ளோம். ஒவ்வொரு குடும்பமும் பயனடைய வேண்டுமென திட்டங்களை நிதி சுமைகளுக்கு இடையிலும் கொண்டு வருகிறோம்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் வியாபாரிகளுக்காக தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை, பொள்ளாச்சி ரயில் நிலைய புனரமைப்பு, மெட்ரோ திட்டம் திருப்பூர் வரை நீட்டிப்பு, சேரன் எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு,
சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் நீக்கம், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றம் உள்ளிட்டவற்றை செய்வோம் என மீண்டும் நிரூபிப்போம். தொழில் மிகுந்த கோவையை பத்தாண்டுகளாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு தாக்குதல் மூலம் பாஜக நாசம் செய்துள்ளது.

பண மதிப்பிழப்பினால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடிந்து போனது. ஜிஎஸ்டியினால் முதலாளிகளை கடனாளிகளாக்கியுள்ளது. 35 % மில்கள் மூடும் நிலையில் உள்ளது.
பாஜக என்ற கலவர கட்சியை உள்ளே விட்டால் அமைதி, தொழில் வளர்ச்சி போய்விடும். தமிழ்நாடு வளர்ச்சியை தடுப்பது யார் என மக்களுக்கு நன்றாக தெரியும். போலி முகமூடி மொத்தமாக கிழிந்து தொங்குகிறது. தமிழ்நாட்டை புறக்கணித்த மோடிக்கு, தமிழ்நாடு சொல்ல வேண்டியது வேண்டாம் மோடி.

தெற்கில் இருந்து வரும் குரல் இந்தியா முழுக்க கேட்கட்டும். பாஜகவையும், அதன் பி டீம் அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். உங்களது வாக்குகள் இந்தியாவை, தமிழ்நாட்டை, எதிர்காலத்தை காக்கட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே” எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ”நான் தமிழ்நாட்டிற்கு வருவதை விரும்புகிறேன். இன்று சித்தாந்த போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு மோடி அரசு போய்விடும்.

இதனை நரேந்திர மோடியின் அரசு அல்ல, அதானி அரசு என அழைக்க வேண்டும். அவர் பல வேலைகள் அதானிக்காக செய்து கொண்டிருக்கிறார். விமான நிலையம், துறைமுகம், நெடுஞ்சாலை என அனைத்தையும் அவருக்கு கொடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் அதானி பற்றி பேசியதும், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சில வாரங்களில் பறிக்கப்பட்டது. எனக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியாக உறவு அல்ல, குடும்ப ரீதியான உறவு உள்ளது. உங்களுக்கு என தனி வரலாறு உள்ளது.

பெரியார், அண்ணாதுரை, காமராஜர், கலைஞர் ஆகியோர் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களின் உணர்விலும், உயிரிலும் கலந்தவர்கள். ஏன் எங்கள் மொழி, வரலாறு, பாரம்பரியம் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? இங்கு வந்து பிரதமர் மோடி தோசை பிடிக்கும்.
டெல்லிக்கு சென்றால், ஒரே நாடு ஒரே மொழி என்கிறார். ஏன் ஒரே மொழி ? ஏன் தமிழ், கன்னடா மொழிகள் இல்லை? இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தோசை, வடை பிடிக்கும் என்பது பிரச்சனை இல்லை. தமிழ் மொழியை பிடிக்குமா? இந்த நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன செய்தீர்கள்? எனது அண்ணன் ஸ்டாலின். நான் வேறு யாரையும் அண்ணன் என அழைப்பதில்லை.
மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர ஊழல். பாஜக வாசிங் மைசினை வைத்துள்ளது. முதலில் மோடி அரசியலை சுத்தப்படுத்த போகிறேன் என்றார். அதற்காக புதிதாக தேர்தல் பத்திரம் கொண்டு வந்துள்ளார். அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், யார் என வெளியே தெரியாது.

உச்சநீதிமன்றம் இது சட்டவிரோதம் என்றது. யார் பணம் கொடுத்தார்கள் என்பதை உச்சநீதிமன்றம் வெளியிட கூறியதும், விவரங்களை வெளியிட்டார்கள்.
சிபிஐ, இடி, ஐடி விசாரணை நடத்திய சில நாட்களில் பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெற்றதும், வழக்கு திரும்ப பெறப்பட்டது. அதானி அரசை கட்டுப்படுத்தி கொண்டுள்ளார். உலகில் இதுபோல வேறு யாரும் ஊழல் பண்ணவில்லை. ஆனால் மோடி சுத்தமான அரசியல்வாதி என்கிறார்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை விட இந்தியா மோசமாக உள்ளது. 30 விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்கிறார்கள். இந்தியா கூட்டணி என்ன செய்ய போகிறது வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்ப்போம்.
பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு அப்ரசண்டிஸ் சட்டம் மூலம் ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படும் நீங்களே நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தருவேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம். அப்போது 2024-ல் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். மோடி, அதானி அரசியல் இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளது.
ஒன்று கோடிஸ்வரர்கள் இந்தியா, இன்னொன்று ஏழைகள் இந்தியா. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் தருவோம்.

இது சாதாரணமாக தேர்தல் அல்ல. தத்துவ போர். மக்களின் வரலாறு, மொழி, உரிமை, அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்பது புத்தகம் அல்ல. நாட்டின் ஆத்மா. நாட்டின் ஆத்மா மோடி, ஆர்.எஸ்.எஸ். தாக்கப்படுகிறது. இந்தியா என்பது ஆர்.எஸ். எஸ் அமைப்பிற்கு சொந்தமானது அல்ல.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ் தனது ஆட்களை நியமித்துள்ளது. இது இந்திய ஒன்றியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். சிபிஐ, ஐடி, இடி வைத்து ஐனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்த நாடு பிரதமரின் சொத்து அல்ல, இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வேட்பாளர்களை பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.