டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் சந்திக்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது . இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே மணீஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார் .
மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விபரம் :
டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரின் நகல் தான் இந்த விசாரணையின் மையப் புள்ளி.
மணீஷ் சிசோடியா மற்றும் 14 பேர் மீது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ. இதில் அப்போதைய கலால் துறை ஆணையர், மூன்று அதிகாரிகள், இரண்டு நிறுவனங்கள் மற்றும் ஒன்பது தொழிலதிபர்களும் அடங்குவர்.
புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, அரசின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. அதே வழக்கில், உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்களுக்கு நியாயமற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய மதுபானக் கொள்கையில் தன்னிச்சையான மாற்றங்களைச் செய்தனர் என்றும் கூறப்பட்டது.
சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளிகளான அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அர்ஜுன் பாண்டே ஆகியோர் (பட்டி ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள்) உரிமம் வைத்திருப்பவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அனுப்பியதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது .
அனுமதி மறுப்பு :
இதனிடையே அவரை இன்று சந்திக்க அனுமதி கோரி கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் விண்ணப்பம் வழங்கியிருந்தார்.
ஆனால் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் , ”பிரதமர் மோடியின் உத்தரவின் பேரிலேயே சுனிதா கெஜ்ரிவாலின் அனுமதியை சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்று போர் லோடி தூக்கியுள்ளனர் .
மோடி மனிதாபிமானமற்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி வருவகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை பயங்கரவாதி போல் நடத்துகிறார். சிறையில் கணவரை சந்திக்க சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு மோடி பகிரங்கமாக சொல்ல வேண்டும் .” என்று ஆம் ஆத்மியின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று மதியம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.