விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி, பின்னர் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

அப்போது, விருத்தாசலத்தை கடந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்துக்குடல் ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்பதிவு இல்லா பெட்டியில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த சென்னையில் கூலி வேலை செய்த வாலிபர் ஒருவர்,
ஆனால் தூக்க கலக்கத்தில் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் கத்தி கூச்சலிட்டதுடன் ரயில் பெட்டியில் இருந்த டிடிஆரிடம் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து டிடிஆர் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதி ரயில் தண்டவாளம் முழுவதும் தேடியுள்ளனர்.
வாலிபர் குறித்து எந்தவித தகவலும் தெரியாததால் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, சாத்துக்குடல் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள ஓடை பகுதியில் பாராங்கற்களுக்கு இடையே பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாலிபரின் உடல் கிடந்தது. இதை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை கொண்டு விசாரணை நடத்தியதில், அவர் அரியலூர் மாவட்டம், பெரிய பட்டாக்காடு பகுதியைச் சேர்ந்த கருப்பையன் மகன் சதீஷ்குமார் (35) என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 ஆம் தேதி உளுந்தூர்பேட்டைக்கும் பூவனூருக்கும் இடையே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் விழுந்து உயிரிழந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் இதுபோன்று நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக நடந்து வரும் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க ரயில்வே துறை பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.