பிரம்மதேசம், மரக்காணம் அருகே திருட வந்த பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமைத்து சாப்பிட கும்பல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 91 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உணவுப் பொருட்களும், சத்துணவுக்கு தேவையான பொருட்களும் சமையல் அறையில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிற்றுண்டி உணவுத் திட்டத்துக்கு தேவையான பொருட்கள் லாரியில் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
இதை இறக்கி வைப்பதற்காக சமையலர் பத்மாவதி, சமையல் அறையின் கதவை திறக்க வந்தார். அங்கு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது உணவு பொருட்கள் சிதறி கிடந்தன. சமையல் கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனே பத்மாவதி கேஸை நிறுத்தினார். இரவில் பள்ளியில் திருட வந்த கும்பல் சமையல் அறையில் பாத்திரங்கள் கேஸ் அடுப்பை பயன்படுத்தி சத்துணவு சமைத்து சாப்பிட்டு விட்டு சில உணவுப் பொருட்களை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பத்மாவதி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அந்தப் பேரின் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த சமையல் அறையை பார்வையிட்டு அக்கப்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த பள்ளி சமையல் அறையில் ஏற்கனவே இது போன்ற உணவுப் பொருட்கள் மாணவ, மாணவிகள் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் தட்டுகள், டம்ளர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அந்த கும்பலுக்கு இந்த திருட்டில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பள்ளியின் சமையல் அறையில் புகுந்த மர்ம கும்பல் உணவுப் பொருட்களை திருடியதோடு, அங்கு சமைத்து சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் நடுக்குப்பம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.