மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த 3 பேர் மீது செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் ஏறியதில் மூவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழப்பு. பொறையார் போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்டம், பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் முகமது ஷக்கீம், 8 ஆம் வகுப்பு மாணவன் ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் நாகப்பட்டினம் விழா ஒன்றில் பங்கேற்று விட்டு, இன்று திரும்பி கடலூருக்கு கேடிஎம் பைக்கில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.

அப்போது தரங்கம்பாடி பகுதியில் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது எதிரே வந்த டிராக்டர் கீழே விழுந்த மூவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் போலீசார் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஶ்ரீதர் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஶ்ரீதர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.