சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இருந்து சேலம் நகர பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, அயோத்தியபட்டினம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியில் சாலைக்கு வந்த போது இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
அதில் இரண்டு இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வீராணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முன்பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒரு குழந்தை உட்பட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்.

அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது லாரி மற்றும் தனியார் பேருந்துக்கு இடையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்தவர்கள் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.