பெங்களூரு விமான நிலைய சாலையில், வாலிபர் ஒருவர் அவரது காதலியை தனது மடியில் அமரவைத்தபடி பைக் ஓட்டிச்சென்றார். தன் காதலியை கவர்வதற்காக அவரை மடியில் அமரவைத்து கொண்டு, ஹெல்மெட்டும் அணியாமல் அதிவேகத்தில் பைக்கை ஓட்டிச்சென்றார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் பெங்களூரு காவல் துறையை டேக் செய்து அந்த வீடியோவை பகிர்ந்தனர். இதனால் அந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கு சென்றது.

இதை அடுத்து அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் பைக்கின் பதிவெண் மூலம் அந்த வாலிபரை கண்டுபிடித்த எலகங்கா போலீசார், வாலிபரை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் 21 வயது சிலம்பரசன் என்பதும், ஷாம்புரா எம்.வி லே அவுட்டில் வசித்து வரும் கால் டாக்சி டிரைவர் என்பதும் தெரியவந்தது.

சிலம்பரசன் மீது ஐபிசி பிரிவு 279 மற்றும் இந்திய மோட்டார் வாகன சட்டம் 184, 189, 129, 177 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.