புதுச்சேரி அருகே போதையில் டீக்கடைக்காரரின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவதால், அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இதனிடையே அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள கடையில் நேற்று பார்வையற்றவர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போதையில் அங்கிருந்த பார்வையற்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அருகிலிருந்த டீக்கடைக்காரர் பிரபாகரன் (57), எதற்காக அவர்களிடம் தகராறு செய்கிறாய் என்று தட்டி கேட்டுள்ளார். அதற்கு ஆத்திரமடைந்த அந்த போதை வாலிபர்,
பிரபாகரனை தகாத வார்த்தையில் திட்டியதோடு, சட்டையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதை அடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக ரோந்து வந்த பெரியகடை போலீசார் போதை வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் புதுச்சேரியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் குரு (22) என்பதும், டீக்கடை அருகே அமர்ந்திருந்த மாற்று திறனாளிகளிடம் தகராறில் ஈடுபட்டதும், அதை தட்டி கேட்டதால் பிரபாகரனை கத்தியால் வெட்டியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை பெரியகடை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் குரு மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் படுகாயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக குருவை கைது செய்த போலீசார், அவரை எச்சரித்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.