தேர்தலில் பாஜகவை தோற்கடித்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை வீட்டுக்க அனுப்ப தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று சஞ்சய் சிங் எம்பி ஆவேசமாக தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் அவரை கைது செய்தது. அப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் நீதிமன்ற காவல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதம் நேற்று நடந்தது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டெல்லி சட்டமன்ற சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல்,துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, அமைச்சர்கள் அதிஷி,கோபால் ராய், எம்பி,எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சஞ்சய் சிங் எம்.பி பேசுகையில்;-‘‘ மொத்தம் 456 சாட்சிகளில் 4 பேர் மட்டுமே கெஜ்ரிவாலுக்கு எதிராக சாட்சி அளித்தனர்.
அப்போது எந்த சூழ்நிலையில் அவர்கள் அவ்வாறு சாட்சி அளித்தனர் என அனைவருக்கும் தெரியும். அப்போது தேர்தலில் பாஜகவை தோற்கடித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வீட்டுக்கு அனுப்ப கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.
பஞ்சாப்பின் கட்கர் காலன் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றார். பல்வேறு மாநிலங்களில் அந்த கட்சியின் சார்பில் உண்ணாவிதம் நடந்தது.
அமெரிக்காவின் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டனில் நடந்த உண்ணாவிரதத்தில் இந்தியர்கள் பங்கேற்றனர் என ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.