கோவை மாவட்டம், உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இல்லாததால் விபத்து ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு சிறுவர்கள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. அதிர்ஷ்ட்டவசமாக பாலத்தில் இருந்து கீழே விழவில்லை. இருப்பினும் நான்கு பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இன்று பக்ரீத் பண்டிகை என்பதால் விடுமுறை நாளான இன்று பலரும் இந்த புதிய மேம்பாலத்தை பார்க்க ஆர்வமுடன் சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை குறிச்சி பிரிவு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் மேம்பாலத்தில் அதிக வேகத்தில் சென்றதாக தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாலத்தின் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

பயன்பாட்டிற்கு வராத பாலத்தின் மீது பொதுமக்கள் வாகனத்தில் செல்லாதவாறு பாதுகாப்பு பணிகளில் போலீசாரை ஈடுபடுத்தி இருந்தால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம்.
மேலும் பாலத்தின் மீது விழுந்த சிறுவர்கள் தடுப்பில் மோதி கீழே விழுந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தப்பி உள்ளனர்.

எனவே மேம்பால பணிகள் நடந்து முடிந்து சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.