கோவையில் தீபாவளியை முன்னிட்டு குவிந்த 1,350 டன் குப்பைகள் அகற்றம். கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் நேற்று தீபாவளி நாளில் 1,350 டன் குப்பைகள் சேர்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஓய்வில்லாமல் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதிய உடை உடுத்தி வெடி வெடிப்பது. பல்வேறு இனிப்புகளை சாப்பிடுவது. இட்லி மட்டன் குழம்பி சாப்பிடுவது என்று தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினமும் 100 முதல் 1200 டன் குப்பை தேங்கும். அதனை தூய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அப்புறப்படுத்துவார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாக சேகரிக்கும் குப்பை, பொது இடங்களில் சேகரிக்கும் குப்பைகளை குறிப்பிட்ட இடங்களில் குவித்து, அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டுவார்கள். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த 2 நாளாக கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட குப்பை 250 டன் கூடுதலாக சேர்ந்தது. பட்டாசு பேப்பர்கள் தெருக்களை நிரப்பி உள்ளன. இதனால் சாலைகள் குப்பை கடலாக மாறி உள்ளது. இந்த பேப்பர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.
தீபாவளி நாளில் மட்டும் மொத்தம் 1,350 டன் குப்பை சேர்ந்தது. இந்தக் குப்பைகளை இன்று காலை முதல் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர் விடுப்பில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. நாளை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள் என்பதால் நாளை அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.