திண்டிவனம் அடுத்த நெய்க்குப்பி கிராமத்தில் கணவன் தகாத உறவால் மனைவியை கொடுமைப்படுத்தி வந்த நிலையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெய்க்குப்பி கிராமத்தை சேர்ந்த எட்டியான் மகன் ஏழுமலை (30). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது மகள் ரம்யா (30).
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று இருவரும் நெய்க்குப்பியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தன் தாய் வேளாங்கண்ணியை போனில் தொடர்பு கொண்ட ரம்யா ஏழுமலை தன்னுடன் வாழாமல் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து கொண்டு தொடர்ந்து சண்டையிட்டு அடித்து துன்புறுத்தினார்.
அப்போது தினமும் தன்னை கொடுமைப்படுத்தியும், நாளை நீ உயிரோடு இருக்க கூடாது என்று கூறி சென்றதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் நெய்குப்பி கிராமத்தில் இருந்து போனில் ரம்யாவின் தாய் வேளாங்கண்ணியை தொடர்பு கொண்ட ராஜா என்பவர் உங்கள் மகள் தூக்குபோட்டு இறந்து விட்டார் என்று கூறியுள்ளர்.
அதிர்ந்து போன ரம்யாவின் தாய் வெள்ளிமேடுபேட்டை போலீசாரிடம் புகாரளித்ததை அடுத்து நெய்க்குப்பிக்கு விரைந்த காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரம்யாவின் கணவர் ஏழுமலையை நேற்று இரவு வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர். கணவனின் தகாத உறவால் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.