பெங்களூரு : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் சதம் விளாச இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை அணியை வீழ்த்தியது. இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில் 13 வது உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அசராத வெற்றி உடன் அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் இந்தியா களமிறங்கியது. நெதர்லாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இரு அணிகளும் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித், சுப்மன் கலக்கல் துவக்கம் தந்தனர். சுப்மன் 30 பந்தில் அரை சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் அடித்த சுப்மன் விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். பொறுப்பாக விளையாடிய கோலி அரைசதம் அடித்தார். இருவரும் விக்கெட்டை பறிகொடுக்க, பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ், லோகேஷ் ராகுல் சேர்ந்து மிரட்டினர்.
லீட் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட ஸ்ரேயாஸ் முதலில் சதம் எட்டினார். இவர் வான்பீக் வீசிய 49 ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 25 ரன் எடுக்கப்பட்டன. லீட் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் வீசிய ராகுல் அதிவேக சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து 410 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது. நெதர்லாந்து அணி சார்பில் தேஜா 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் பந்து வீசிய பும்ரா, சிராஜ், ஜடேஜா, மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். கோலி, ரோஹித் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் வென்றார்.