விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல், வாக்கு சேகரிப்பு, தேர்தல் பிரச்சாரம் என களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளில் உள்கட்சி பூசல்கள் இருக்கத்தான் செய்யும்.
அந்த வகையில் தற்போது விருதுநகர் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியாகியுள்ளது. விருதுநகர் பாஜக சார்பில் வேட்பாளராக ராதிகா சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அவரது கணவர் சரத்குமார் தனது கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு நிர்வாகிகளுடன் பாஜகவில் இணைந்தார். இதை தொடர்ந்து ராதிகாவுக்கு சீட் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து ராதிகாவும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தற்போது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகாவுக்கு போட்டியாக பாஜகவை சேர்ந்த வேதா என்ற மருத்துவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் சுயேச்சையாக தாக்கல் செய்துள்ளார். இவர் பாஜகவில் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணியின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். டெல்லி பாஜக மோடி அணி சார்பாக வேதா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை நான் கொடுத்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அப்போது ராதிகாவுக்கு அளித்துள்ளார்கள்.
எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் தொகுதியில் பிரச்சாரங்களை எல்லாம் செய்திருந்தேன். அது கிடைக்காமல் போய்விட்டது. அதனால் நான் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். நான் தமிழக பாஜக சார்பில் களமிறங்கவில்லை.
டெல்லி பாஜக சார்பில் களமிறங்கியுள்ளேன், காங்கிரஸில் எத்தனையோ பிரிவுகள் உள்ளன. அதுபோல் பாஜகவில் ஏன் இருக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். பாஜகவிலேயே ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுவது ஓட்டுக்களை பிரிக்க உதவும். எனவே அதில் ராதிகாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.