சேலம் அடுத்த மல்லூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் அரசு டாக்டர் செல்வராஜ். இவரது மகன் கவுதம் வயது (20), அதேபகுதியை சேர்ந்தவர்கள் ஜெகநாத் வயது (21), பாலசுப்பிரமணியம் மகன் சரண் வயது (23). இவர்கள் புதுவை பிள்ளையார் குப்பம் மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரியில்3ம் ஆண்டு மருத்துவபடிப்பு படித்து வருகின்றனர்.

இவர்களது நண்பர்களான கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அடுத்த வெட்டுமணி பகுதியை சேர்ந்த பிரபாகர்சிங் மகன் காமியோ வயது (21), அதேபகுதியை சேர்ந்த சத்தியபிரபா வயது (21) ஆகியோரும் புதுவை மருத்துவகல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இவர்கள் சேலத்தில் கவுதம் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு நண்பர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கன்னியாகுமரி நோக்கி காரில் புறப்பட்டனர். அப்போது காரை காமியோ ஓட்டி சென்றார்.

சேலம் மாவட்டம் மல்லூர் பொய்மான்கரடு பகுதியில் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பகுதியில் கார் பயங்கர வேகத்துடன் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் கவுதம், காமியோ ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது ஜெகநாத், சத்தியபிரபா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்பு சரண் லேசான காயத்துடன் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெகநாத், சத்தியபிரபாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் பலியான கவுதம், காமியோ ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அப்போது விபத்தில் பலியான கவுதமின் தந்தை செல்வராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராகவும், தாய் நியூரோ சர்ஜரி பிரிவில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.