10 ஆம் வகுப்பின் கடைசி தேர்வை எழுத சென்ற போது நடந்த விபத்தில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். செஞ்சி அருகே கொங்சுரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜய்குமார் வயது (16). இவர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி தேர்வாக நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக் மோதியதில் அஜய் குமாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, படுகாயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 7 தையல் போடப்பட்டது. இருப்பினும் அஜய்குமார் பொதுத்தேர்வு எழுதும் சூழ்நிலை இருந்ததால் அவரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சலீம் மற்றும் பசுபதி ஆகியோர் தையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் தேர்வு எழுதிய பின்னர் மீண்டும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.