காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, திரைப்பட நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா நேற்று பிரச்சாரம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த பிள்ளையார்பாளையம் மற்றும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனார்.
அப்போது அவர் பேசியதாவது;- பாஜகவில் கூட்டணி வைக்க, எங்களுக்கு சீட் எவ்வளவுனு சரத்குமார் கேட்டார். அதுக்கு அண்ணாமலை, உங்க கட்சி எவ்வளவுனு கேட்டார். உடனே டக்னு தன் கட்சியை கலைத்து பாஜகவில் சேர்ந்து விட்டார் சரத்குமார்.
அதுக்கான விழா எல்லாம் எடுத்து மெல்லமா வொய்ப் ராதிகாவையும் கூப்டுட்டு அண்ணாமலையை பாக்க போயிருக்கார் சரத்குமார். இதனால் கட்சியே திரண்டு வரும்னு சொன்னீங்க எங்க உங்க கட்சினு அண்ணாமலை பதறிப்போய் கேட்டார். அதுக்கு சரத்குமார், நாங்க ரெண்டு பேரு தான் கட்சினு சொல்லியிருக்கார்.
பொம்பள சோக்கை விட மிக மோசமான சோக்கு பாஜகவில் கூட்டணி வைப்பது, அன்புமணிக்கு மனைவியை எம்பியாக்குவது ஆசை. அதனால் கட்சியை காவு கொடுத்து விட்டு, பாஜகவில் அடகு வைத்து விட்டார்.
டிடிவி.தினகரன் தனக்கு ஒரு சீட்டு போதும் என்று கதறி இருக்கிறார். அதுவே நான் தாங்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் தலையில் 2 சீட்டுகளை அள்ளிக் கொடுத்துட்டாங்க. இதாச்சும் பரவாயில்ல.
ஓபிஎஸ்சுக்கு ஒரு சீட்டு கூட கொடுக்காம அசிங்கப்படுத்திட்டாங்க. சீட்டு பத்தி பேசுறதுக்காக அண்ணாமலை வீட்டுக்கு ஓபிஎஸ் அடிக்கடி போனதால, இப்ப அண்ணாமலை வீட்டு ரேஷன் கார்டில ஓபிஎஸ் பேர சேத்துவிட்டிருக்கார். இவ்வாறு விந்தியா பேசினார்.
அப்போது பிரசாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.