சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்து ஒன்றில், துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்தப் பேருந்து திருச்சி, மதுரை, கோவில்பட்டி வழியாக இன்று காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைந்தது. அப்போது பயணிகளை இறக்கி விட்ட பின்னர், அந்த பேருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, பணிமனை ஊழியர்கள், வழக்கமாக பேருந்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தில் ஒரு துப்பாக்கி மற்றும் அரிவாள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து பணிமனை மேலாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். மேலும், அரசு பேருந்தில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர்.
இந்த விசாரணையில், பேருந்தின் 9 ஆம் நம்பர் இருக்கையின் அருகே இந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரித்தனர்.

மேலும் 9 ஆம் நம்பர் இருக்கையில் பயணித்த பயணியின் விவரங்களை சேகரித்த போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.