விழுப்புரம் அருகே இயங்கி வரும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் வெளியேறிய நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி மயக்கம் மூச்சு திணறல் ஆகியவர்களா பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வட்டாட்சியர் தலைமையில் அந்த தனியார் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடம்பட்டு ஊராட்சியில் (Sandiya enviro tech) என்ற
தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வேடம்பட்டு, நன்னாடு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ சுத்திகரிப்பு ஆலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆலையை மூட மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை முழுவதுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் தனியார் மருத்துவ கழிவு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணி செய்யப்பட்டது. ஆனால் அதை முறையாக செய்யாமல் கழிவுகளை அப்பகுதியிலேயே எரித்து வருவதால் அதிலிருந்து வெளியேறும் கரும்புகையினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக வேடம்பட்டு பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் இந்த தொழிற்சாலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக அந்த தொழிற்சாலையை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தின் எதிரொலியாக, அஜாக்கிரதையான செயலால் காற்றை மாசுபடுத்துதல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருத்தல், சட்டவிதிகளுக்கு உட்படாமல் தொழிற்சாலையை நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொழிற்சாலையின் உரிமையாளர் கண்ணன் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.