தமிழ்நாட்டையே உலுக்கிய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. கடந்த 2018 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி கைது செய்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள், பெற்றோர், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் என 120 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
இதை அடுத்து, கடந்த 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்மலா தேவி அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார்.