மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுகிறது – சீதாராம் எச்சூரி..!

4 Min Read

மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதாக சி.பி.எம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது; 5 மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவுக்கும் சாதகமாக கருத்துக் கணிப்புகள் அமைந்திருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை, சில மாநிலங்கள் சாதகமாக இருக்கின்றது. சில மாநிலங்களில் சாதகமற்ற நிலை இருக்கிறது. எனினும் இவை மாறுதலுக்கு உட்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சீதாராம் எச்சூரி

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் கீழ் இந்தியாவில் வேலை இழப்பு அதிகரித்துள்ள அதே வேலை பணவீக்கமும் அதிகமாக உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பிரச்சனை பிரதிபலிக்கும். பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர்கள், பழங்குடியினர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஜி 20 மாநாட்டில் இந்தியா தலைமை வகித்ததால், முன்னிலை வகிப்பதாக பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் ஜி.டி.பியில் 20வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில் இந்தியா உள்ளது. யுனெஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் பதில் அளிக்க வேண்டும்.

இந்திய நாட்டு மக்களுக்காக இந்தியாவுக்காக பாசிச சக்தியான பாஜக வீழ்த்தப்பட வேண்டும். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் தமிழகத்தில் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்படும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை எட்டும். இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மிரட்ட ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. கேரளாவில் 8 மசோதாக்களை கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிலை நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சி.பி.எம் மாநில செயலாளர் கே‌. பாலகிருஷ்ணன் பேசும்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டாலும் “பி” டீமாக செயல்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இம்முறை அதிமுகவால் பெற முடியாது. முத்தலாக், சிஐஏ, காஷ்மீர் விவகாரங்களில் அதிமுக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இப்போது சிறுபான்மை மக்களின் காவலன் என கூறி ஏமாற்ற பார்க்கிறது. பாஜக மற்றும் அதிமுகவினர் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அது தமிழக மக்களிடையே எடுபடாது. கோவை உட்பட ஏற்கனவே இருக்கும் இரண்டு தொகுதிகளையும், கூடுதலான தொகுதிகளையும் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் கேட்டு பெறுவோம். தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெறும்.

சீதாராம் எச்சூரி

உண்மைக்கு மாறான விடயங்களை மோடி துவங்கி அண்ணாமலை வரை பேசி வருகின்றனர். அண்ணாமலையின் மூளைக்கு எதுவும் தெரியாது. காவேரி டெல்டா பகுதி என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஞானமே இல்லாமல் ஞான சூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் பங்களித்திருக்கின்றனர். கம்யூனிஸ்டுகளா அல்லது பாஜகவா என பகிரங்கமாக விவாதிக்க அண்ணாமலை தயாரா?, சிறுகுறு தொழில் முனைவோரின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு பல மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் மாறும் நிலை இருப்பதை கருத்தில் கொண்டு தொழில் முனைவோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் கடன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை மாநில அரசிடம் வலியுறுத்தி குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வைத்தோம்.

விவசாய போராட்டத்தை முன்னெடுத்த அருண் என்கிற நபர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும். திமுக கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் உள்ளது. போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review