கடலூர் குண்டு சாலையில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது காயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம், அருகே காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவி வயது (53). இவரது மனைவி சரஸ்வதி வயது (35).

ரவிக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை செய்வதற்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு காலை 7 மணியளவில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவை கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் வயது (65) என்பவர் ஓட்டி சென்றார்.

கடலூர் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. அப்போது இடிபாடுகளில் சிக்கிய ஆட்டோ டிரைவர் மற்றும் ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மற்றும் இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகம் மற்றும் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து காரணமாக குண்டுசாலை பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.