வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியான குணா குகையில் அத்துமீறி நுழைந்த 3 பேரை வன சட்டத்தின் படி கைது செய்த வனத்துறையினர். இந்த சம்பவம் குறித்து காணலாம்.
திண்டுக்கல் மாவட்டம் அருகே சுற்றுலாத்தலமான கொடைக்கானல் இங்குள்ள சுற்றுலா தளங்களை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வருகின்றனர்.

அப்போது வனத்துறைக்கு கட்டுப்பட்ட குணா குகை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரையும் வனத்துறையினர் அனுமதிப்பது கிடையாது. ஆனால் குணா குகைக்கு செல்லும் பகுதியில் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி வந்த மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இளைஞர்கள் குணா குகைக்கு செல்லும் சம்பவம் படமாக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் கேரளா சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் குணா குகை நோக்கி படை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட குணா குகை பகுதியில் இன்று கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர்கள் விஜய், பாரத் மற்றும் ரஞ்சித் ஆகிய 3 சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பு வளையத்தை மீறி தடுப்பு கம்பிகளின் மீது ஏறி குதித்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் 3 இளைஞர்களையும் வன சட்டத்தின் படி கைது செய்தனர். மேலும் குணா குகைக்கு முன்புறம் கம்பி வேலி அடைக்கப்பட்டுள்ளது. அதுவரை செல்வதற்கு நபர் ஒன்றுக்கு இவ்வளவு என்று வனத்துறையினர் கட்டணமும் வசூல் செய்கின்றனர்.
தற்போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் குணா குகையை காண்பதற்காகவே வருவதால் தொடர்ந்து குகைக்கு செல்வதற்காக இளைஞர்கள் முயற்சி செய்வார்கள்.

ஆகவே வனத்துறையினர் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யும் இடத்திலேயே சுற்றுலா பயணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். குணா குகைக்கு செல்வதற்கு கட்டணம் வசூல் செய்ய கூடாது. யாரையும் அனுமதிக்க கூடாது என கோரிக்கையும் எழுந்துள்ளது.