திண்டிவனம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் 17 சவரன் நகைகளை திருடிய ‘ஹோம் கேர்’ நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த சலவாதி, பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (70), விழுப்புரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலர்.

இவர் உடல் நலம் சரியில்லாத இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காக அவரது மகன் சிங்காரவேலன், திருநெல்வேலி மாவட்டம், பழவூர், புதிய காலனியைச் சேர்ந்த ‘ஹோம் கேர்’ நபர் முத்துலிங்கம் (22), என்பவரை நியமித்திருந்தார்.
கடந்த 30 ஆம் தேதி, சிங்காரவேலன் வீட்டில் இல்லாத நேரத்தில் முத்துலிங்கம் வீட்டிற்கு வந்து ஜெயகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளித்து விட்டு சென்றார். அப்போது வெளியே சென்றிருந்த சிங்காரவேலன் வீட்டிற்கு வந்த போது, மேஜை டிராயர் மற்றும் பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகைகளை காணவில்லை.

சிங்காரவேலன், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நகைகளை முத்துலிங்கம் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
அதை தொடர்ந்து சென்னையில் பதுங்கியிருந்த முத்துலிங்கத்தை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து 10 சவரன் நகைகளை மட்டும் மீட்டனர்.

தொடர் விசாரணையில் முத்துலிங்கம், திண்டிவனம் மொட்டையர் தெரு உள்ளிட்ட சில வீடுகளில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 சவரன் நகைகள் அவரிடமிருந்து போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.