அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கீழமை, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்தே செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
அதில் செந்தில் பாலாஜி தரப்பு மனு மீது அமலாக்கத்துறை அளித்த பதில் மனுவில் செநந்தில் பாலாஜிக்கு ஜாமின் அளிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு அளித்துள்ளது.
இதனிடையே, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உத்தரவிற்காக தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.
அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று கடந்த 22 ஆம் தேதி வங்கி தொடர்பான செலான் உள்ளிட்ட ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் நேரில் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், மனு மீதான வாதம் விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கௌதமன் ஆஜராகி, தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்திற்கும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரிய முரண்பாடு உள்ளதாக கூறினார்.
காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அதனை நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ அல்லது தடயவியல் சோதனைக்கோ உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
எனவே பல ஆவணங்கள் அமலாக்கத்துறை தனக்கு ஏற்றார் போல் மாற்றியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்து வாதிட்ட அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஆவணங்களில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் ஆவணங்களை திருத்தவும் இல்லை என்றார்.
அசல் ஆவணங்கள் உள்ள தொகை உள்ளிட்ட எந்த வேறுபாடும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அசல் ஆவணங்களை வங்கி வழங்கியது தங்களுக்கு சாதகமானது எனவும் தெரிவித்தார்.
மேலும், அசல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்திலும், நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலும் உள்ளன என்பதை தவிர அனைத்து குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை மீது செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனை அடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உத்தரவை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.