கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர் அதில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. அதில் கோவை மாவட்டமும் தப்பவில்லை. 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தொடும் மாவட்டங்களில் கோவையும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இஸ்லாமிய பிரச்சார சபை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இன்றைய தினம் சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து இறைவனை வழிபட்டனர்.

மௌலவி யூனுஸ் ஃபிர்தெளசி இந்த சிறப்பு தொழுகையை நடத்தினார். மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்வு நடத்தப்பட்ட பின்னர் அதில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.