கோவையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்.
தமிழ்நாட்டில் கடந்த 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல், 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக-வினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாஜக சூலூர் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் அந்த பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறினர்.
இது குறித்து பேசிய ரவிகுமார், பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வெற்றியை பறிக்க முயற்சிப்பதாகவும் இந்த தேர்தல் முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும், பல்வேறு வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதால் பலரும் வாக்களிக்க இயலாமல் சென்றாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.