கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கோவை தாலியூரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மேலும் யூடியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும். புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்த நிறுவனம் மாதம், மாதம் பணம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது. தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.
இதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கடந்த 11-ம் தேதி MYV3ADS எம்.டி மன்றம் என்ற சேனலில் உறுப்பினர்களாக சேர்ந்து மேற்படி சேனலில் தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை மோசடிகள் செய்வதாகவும், இதனை தடுக்கக் கோரி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 03/2024 U/s 3 r/w 4 of Prize Chits and Money Circulation Schemes (Banning) Act 1978 & 3 and 6 r/w 21 (2) of the Banning of Unregulated Deposit Schemes Act CTnQ2019 – 19.01.2024 அன்று காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடைபெற்று வருகின்றனர். இந்த வழக்கு பதிவை கண்டித்து முதலீட்டாளர்களுக்கு, MYV3ADS நிறுவனத்தின் இயக்குநர் சக்தி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில்;-
நம்முடைய MYV3ADS நிறுவனம் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக சுமார் ஐம்பது இலட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட மக்களின் நன்மதிப்பை பெற்று சக்தி வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பல இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் நம்முடைய நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களாகவும் கடந்த சில நாட்களாகவும் சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.
இதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வரும் திங்கட்கிழமை 29-01-2024 அன்று காலை 9 மணி அளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்க இருக்கிறது. ஆகவே அனைத்து உறுப்பினர்களும் நம்முடைய நிறுவனத்தில் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் குடும்பம் குடும்பமாக தவறாமல் வர வேண்டும்.

ஏனோதானோ என்று இருக்காமல் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களுக்கு கீழ் பனிரெண்டு லெவலில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும் புதிய உறுப்பினர்களுக்கு தெரியாது. ஆகவே வருமானம் பெற்று வரும் அனைவரும் தொடர்ந்து வருமானம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் தவறாமல் வாருங்கள். கூட்டம் சேர்வதற்கு அல்ல தவறான தகவல் இருக்க கூடாது என்பதற்கு கூட்டம் பல லட்சத்தை தாண்டினால் நமக்கு வெற்றி.
இதற்குப் பின்னால் இனிமேல் எவனாவது MyV3ads பெயரை தவறாக நினைத்தாலே கொலை நடுங்கும் அளவிற்கு கூட்டம் சேர வேண்டும். இயற்கையின் அருளும் இறைவன் அருளும் மக்கள் சக்தியும் உள்ள நம்முடைய MYV3ADS நிறுவனத்தை யாராலும் அசைக்க முடியாது. நன்றி வணக்கம் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க முதலீட்டாளர்கள் வர உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தால், போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கூடுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் கோவை மாவட்டம், நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து முதலீட்டாளர்கள் கூறும் போது;- நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் மோசடி செய்யவில்லை. ஆனால் மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப்பார்க்கிறார்கள்.
இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாச்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாச்சியர் உறுதியளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.