மோடியை அரியணையில் அமரவைப்பதன் மூலம் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற முடியும்: தினகரன்

0
18
டிடிவி தினகரன்

நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் உறுதியேற்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் உங்களில் ஒருவன்… உங்களுக்கானவன்… காவிரிக் கரையில் பிறந்த என்னை, இந்த வைகை மண்ணைச் சேர்ந்த மக்கள் வாரியெடுத்து மகிழ்வதும், கொண்டாடுவதும் நான் செய்த புண்ணியமாகவே கருதுகிறேன். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உங்கள் வீட்டுப் பிள்ளையாக, சகோதரனாக, நண்பனாகக் கருதி, அருவியைப் போல என் மீது அன்பை அள்ளி கொட்டும் எனது அருமை தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவன் ஆவேன்.

வானத்தை நோக்கி எறியும் எந்த ஒரு பொருளும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியை நோக்கி திரும்பி வருவது போல உங்களின் மீது நான் கொண்டிருக்கும் அன்பு கலந்த ஈர்ப்பால் மீண்டும் என் சொந்தங்களைத் தேடி வந்திருக்கிறேன். தேனி மண்ணில் விளையும் செங்கரும்பு திகட்டாத தித்திப்பை தரக்கூடியது. அதுபோலவே இங்கு வாழும் மக்களும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் அன்பை என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

தேனியையும் வைகையையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது என சொல்லும் அளவிற்கு யாருக்கும் வாய்க்காத பந்தம் எனக்கு கிடைத்திருக்கிறது. என் மீது நீங்கள் காட்டும் அன்பைக் கண்டு எதிரிகளும் துரோகிகளும் அதிசயித்து கிடக்கிறார்கள். அன்பு, அறிவு, துணிவு, ஆளுமை என்பதற்கு ஒற்றை இலக்கணமாக திகழ்ந்தவர் அம்மா .

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த இதய தெய்வம் அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று துரோகிகளின் கையில் சிக்கிக் கிடக்கிறது. எந்த லட்சியத்தை முன்னிறுத்தி நம் இயக்கம்(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை எட்டும் வரையில் ஓயமாட்டோம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

டி.டி.வி. தினகரன்

நேர்மையான பாதையில் துடிப்பான தொண்டர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான எண்ணற்ற கொள்கைகளை கொண்டிருக்கும் நமது இயக்கம் வெற்றிக்கான பாதையை எட்டியிருக்கிறது. அதற்கான முதல் படியாக அமைந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை வலுவான கூட்டணி அமைத்து சந்திக்கின்றோம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமரவைப்பதன் மூலம் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை மக்கள் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியை தமிழகத்தின் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றும் முனைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

* முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின் படி 152 அடியாக உயர்த்தி நமது மாநில உரிமை மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியைப் பெற்று வைகை அணையில் முறையான தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழகம் – கேரளாவை இணைக்கும் வழித்தடமான தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* 1984 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி- திப்பரேவு அணைத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.

* எண்டபுளி பஞ்சாயத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான வவ்வால்துறையில் புதிய அணை கட்டி அதன் மூலம் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும், அப்பகுதியில்
நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* கண்ணகி கோட்டம் முழுமையாக தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேனியில் உலகத்தரம் வாய்ந்த மத்தியப் பல்கலைக்கழகம் (Central University), மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மற்றும் மத்திய அரசின் உதவியோடு சித்தா, ஆயுர்வேதக் கல்லூரிகள் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* கேந்திரிய வித்யாலயா பள்ளியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மத்திய அரசின் PM Shri மற்றும் நவோதயா (Navodaya) பள்ளிகளையும் நமது தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இப்படி தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், பிரச்சாரத்தின் போதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் அத்தனையும் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு உறுதியான உத்தரவாதத்தை இந்நேரத்தில் தருகிறேன். நம் ஒவ்வொருவரின் வாக்கும் நமது தொகுதியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்கக் கூடிய பாதுகாப்பு என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். உங்களிடமே சுரண்டி இறுதிகட்ட அன்பளிப்பு என்ற பெயரில் உங்களுக்கே 300, 500 என கொடுக்க முயற்சிக்கும் சூழ்ச்சியை ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். அவற்றுக்கு இடமளித்து ஏமாற வேண்டாம் என தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தேனி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களை வெறும் வாக்குகளாகவே பார்க்கும் எதிர்க்கட்சியினர் மத்தியில், இந்தத் தொகுதியின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு உங்கள் முன் நிற்கும் உங்கள் வீட்டுப்பிள்ளையான எனக்கு குக்கர் சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். குக்கர் சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்தும் ஆயுதங்களாக இருக்கட்டும்.

இரவு பகல் பாராமல் இறுதிகட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களோடு இருப்பேன்… உங்களுக்காகவே உழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here