தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி அறிவித்தார்.

தமிழகத்தில் ரூ.1000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்

இதன்படி, தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. தமிழக பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கனை பெற்றுக்கொண்டனர். டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், எந்த தேதியில், எத்தனை மணிக்கு வர வேண்டும் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 10-ம் தேதி(புதன்கிழமை) முதல் 13-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு

சென்னையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்குதலை முதல்வர் மு.க ஸ்டாலின் 10-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள், அதிகாரிகள் தொடங்கி வைக்க உள்ளனர்.

3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமியானா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here