‘நான் முதல்வன்’ திட்டத்தில் லண்டன் சென்று பயிற்சி முடிந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வரின் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியரின் தனித்திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு,
தமிழகத்தில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக, கல்லூரிகள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை திறன் மேம்பாட்டுக்கழகம் பெற்றது. அப்போது பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகளை நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின், அந்த 100 பேருக்கும் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ, மாணவியர் லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். இதை அடுத்து, கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அந்த மாணவ, மாணவியர் சென்னையில் இருந்து லண்டன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் பேராசிரியர்கள் இருவரும் லண்டன் சென்றனர்.

கடந்த 16 ஆம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பயிற்சியை நிறைவு செய்த 25 பேரும் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் மாணவ, மாணவியரை அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் வரவேற்றனர். சென்னை திரும்பிய மாணவர்கள் கூறுகையில்;- “நான் முதல்வன், திட்டத்தின் மூலம் இணைந்து பயிற்சிகள் பெற்றதன் மூலம், வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வெளிநாடு சென்றது புது அனுபவமாக இருந்தது. முதல் முறையாக விமானத்தில் சென்றோம். இந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.