கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் சிராஜூதீன் (44) இவர் தொழிலதிபர். இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (43) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.11 கோடி வாங்கி உள்ளார். ஆனால் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் சிராஜூதீன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையை அறிந்த பெரோஸ்கான், சிராஜூதீனிடம் வழக்கு எதுவும் வேண்டாம் என சமாதானம் பேச சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பெரோஸ்கான் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தந்து விடுவதாகவும், பின்னர் மீதி தொகையை படிப்படியாக திருப்பி தருவதாகவும் தெரிவித்தார். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பெரோஸ்கான் கூறினார். அதற்கு சிராஜூதீன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், வழக்கை வாபஸ் பெற சிராஜூதீனை மிரட்டுவதற்காக கூலிப்படையை சேர்ந்த திருநெல்வேலி பழைய செட்டி குளத்தை சேர்ந்த ராஜ் (எ) ராஜ நாராயணன் (48), நாங்குநேரியை சேர்ந்த ஞான பாலாஜி (35), தூத்துக்குடியை சேர்ந்த பொன் முருகானந்தம் (56) ஆகியோரை பெரோஸ்கான் அணுகியுள்ளார்.

இதற்காக இவர்கள் 3 பேருக்கும் ரூ.50 லட்சம் பணம் தருவதாக பெரோஸ்கான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து செட்டிகுளம் ராஜ், ஞான பாலாஜி, பொன் முருகானந்தம் ஆகியோர் ஒரு காரில் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு ரூ.20 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு காரில் சென்னையை நோக்கி செல்ல முயன்றனர். இதுகுறித்த ரகசிய தகவல் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற செட்டிகுளம் ராஜ், பொன் முருகானந்தம், ஞான பாலாஜி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ரூ.20 லட்சம் பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான செட்டிகுளம் ராஜ் பிரபல ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் இருக்கிறது. பல கோடி ரூபாய் மிரட்டல் விவகாரங்களில் செட்டிகுளம் ராஜ் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி சென்று பணிய வைப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த வழக்கில் பெரோஸ்கான், வெளிநாட்டில் வசிக்கும் அஷ்ரப்கான் (35), சாலியா பீபி, மைசூரை சேர்ந்த அஜய் (30), ஷாஜி, ஸ்ரீதர் என 6 பேரை தேடி வருகிறோம். பெரோஸ்கான் இரிடியம் மோசடி கும்பல் தலைவனாக இருந்து வந்துள்ளார். சில முக்கிய தொழிலதிபர்களிடமும் மோசடி செய்துள்ளார்.

தற்போது தலைமறைவாக உள்ள பெரோஸ்கானுக்கு பெங்களூருவில் இன்னொரு வீடு இருப்பதாக தெரிகிறது. பெரோஸ்கான் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் குனியமுத்தூரில் உள்ள அவர் வீட்டிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
மோசடி பணத்தில் பெரோஸ்கான் ரூ.1.5 கோடியில் சொகுசு பங்களா கட்டி இரு மனைவிகளுடன் ஜாலி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.