தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் திடீரென கல்வராயன் மலையில் மூடுபனி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் வெள்ளிமலை, மணியார் பாளையம், மேல்பாச்சேரி, கிளாக்காடு, சின்ன திருப்பதி, சேராப்பட்டு உள்ளிட்ட 173 சிறிய மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. மலைவாழ் மக்கள் பிரதான தொழிலாக மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது மழை இல்லாமல் வறட்சியின் காரணமாக மரவள்ளி சாகுபடி முற்றிலும் வயலில் காய்ந்து போய் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் கல்வராயன் மலையில் பெரும்பாலான கிராமங்களில் காலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ஒரு சில கிராமங்களில் பகலிலே பனி பொழிவுவுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன்மலையில் உள்ள சிறுகலூர், தேம்பாவணி, கவியம் போன்ற நீர்வீழ்ச்சிகளில் மிதமான அளவில் நீர் கொட்டுகிறது.
மேலும் அதிகாலை முதல் பகலில் அதிக அளவில் மூடுபனி பொழிவால் சாலைகள் இருண்டு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இதனால் கல்வராயன்மலையில் உள்ள வயல்வெளி மற்றும் மேட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளி அறுவடை நடைபெற உள்ளதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.