பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால் 3வது முறை வெற்றி பெற்றுள்ளோம் என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும் 3 வது முறையாக எந்த ஒரு கட்சியும் இப்படி வென்றதில்லை என்றும் மோடி கூறினார்.
மக்களவை தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவிற்கு இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளன. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் கூட்டணி ஆட்சியை தான் அமைக்க முடியும் சூழலில் உள்ளது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி. பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே தற்போது 3வது முறை வெற்றி பெற்றுள்ளோம். மோடியின் மீதும் மோடியின் திட்டங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 2019-ல் மக்கள் பாஜக மீது வைத்த நம்பிக்கையை 2024 ஆம் ஆண்டில் நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். குஜராத், இமாச்சல் பிரதேசம், டெல்லி மக்கள் எங்களை முழுவதும் நம்பியுள்ளனர். கேரளாவிலும் மக்கள் எங்களை நம்ப தொடங்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது எங்களை பெருமை அடைய செய்கிறது. மூன்றாவது முறையாக எந்த கட்சிக்கும் இத்தனை இடங்கள் கிடைத்ததில்லை. கொரோனா காலத்திலும் வீழ்ச்சியையும், அதன் பிறகு வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.