சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர், அவரது மனைவி இருவரும் வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சித்தா மருத்துவர் சிவன் நாயரையும், அவரது மனைவி பிரசன்னா குமாரி இருவரையும் அவர்களது வீட்டில் வைத்து வெட்டி கொலை செய்து விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவம்நாயர். 72 வயதாகம் இவர் சித்த மருத்துவர் ஆவார். மருத்துவர் சிவம்நாயர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி பிரசன்னகுமாரிக்கு 60 வயது ஆகிறது இவர், மத்திய அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். சிவம்நாயரின் மகனும் சித்த மருத்துவராக உள்ளார்.
இதனால் சிவம்நாயர், பிரசன்னகுமாரி தம்பதி மட்டும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று இரவு சிவம்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார்கள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமால் மற்றும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் நேரில் சென்று பார்த்த போது சிவம்நாயர், அவரது மனைவி பிரசன்னாகுமாரி ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
யாரோ சில மர்ம நபர்கள், டாக்டர் மற்றும் அவரது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. பிரசன்னகுமாரி கழுத்தில் இருந்த நகைகள் அப்படியே இருந்தது. ஒருவேளை பணம், நகைக்காக கொலை செய்ய மர்ம நபர்கள் வந்திருந்தால் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம்.
எனவே நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்டனரா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.