கள்ளச்சாராய உயிரிழப்புகளை காரணம் காட்டி கள்ளு இறக்கும் விவசாயிகளை போலீசார் அச்சுறுத்தக் கூடாது என தெரிவித்துள்ள கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கள்ளு இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் இறந்த நிலையில், இதை கருத்தில் கொண்டாவது பனை தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கள்ளு இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் தென்னை மரங்களில் இருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் சண்முகம் தலைமையில் கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களை தொடர்ந்து விவசாயிகள் கள்ளு இறக்குவதற்கு கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது.

கள்ளு இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கள்ளசாராயம் போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுப்பதற்கு தென்னை மரங்களில் இருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்திட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்திய மகாத்மா காந்தி சுத்தமான கள்ளு ஆரோக்கியமானது என தெரிவித்திருக்கிறார். லிட்டர் 50 ரூபாய் விலையில் கள்ளு விற்பனை செய்யப்பட்டால் மது அருந்துவோர் திருப்தி அடைவார்கள்.

மது குடித்தால் உடலுக்கும், நாட்டுக்கும் தீங்கு என பாட்டில்களில் எழுதி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று கள்ளு விஷம் என்றும், போதைப்பொருள் என்றும் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என விவசாயிகள் அறிவித்தும்,
இப்போது வரை யாரும் முன் வரவில்லை. கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிட்டியின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் கள்ளு இறக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.