வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதை அடுத்து பேக்கரி மாஸ்டர் மீது கொலை வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டாமண்டகப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் வயது (24). இவரது தம்பி அமுதவன் வயது (19).
அதேபகுதியை சேர்ந்த பாஸ்கரன் (எ) கோபாலகிருஷ்ணன் வயது (32). இவர் பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்கிறார். இவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் தகராறில் பகை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் அஜித்குமார், தம்பி அமுதவன் ஆகிய இருவரும் பாஸ்கரன் வீட்டுக்கு சென்று, ஏன் எங்களிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய்? என்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், பாஸ்கரன் அஜித்குமாரை தூக்கி தரையில் தலைக்குப்புற குத்தி விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அதில் அஜித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் உறவினர்கள் அவரை அழைத்து கொண்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 6 மணிக்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து அமுதவன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாஸ்கரன் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வில்லியனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.