கோவை மாவட்டம் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கேஸ் கம்பெனி பகுதியில் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகராட்சி ஊழியர் மற்றும் அவரது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் 32 வயதான அசோக்குமார். இவரது மனைவி 30 வயதான சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது.

இவர்கள் மூவரும் இன்று மாலை கேஸ் கம்பெனியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து மாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வித்யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் எதிரில் வந்த போது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையில் தடுமாறி இவர்கள் மீது மோதியது.
அந்த விபத்தில் நகராட்சி ஊழியரான அசோக்குமாரும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்குள் தனியார் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அப்போது படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசீலாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆத்திரமுற்ற பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.