கோவை மாவட்டம், போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில்வே வழித்தடத்தில், மதுக்கரையில் இருந்து வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது.
இதனால், கோவையில் இருந்து செல்லும் பாதை ‘ஏ லைன்’ எனவும், கேரளாவில் இருந்து வரும் பாதை ‘பி லைன்’ என அழைக்கப்படுகிறது.

இந்த வனப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக சில ரயில்கள் இயக்கப்படுவதால் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கிறது.
இதனால், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021 நவம்பர் மாதம் மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உட்பட 3 யானைகள் உயிரிழந்தது.

இதனை அடுத்து பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் ரயில் பாதையில், யானைகள் அதிகமாக தண்டவாளத்தை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதியில் யானைகள், ரயில் பாதையை கடக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் தமிழக வனப்பகுதியான மதுக்கரை வனச்சரகத்தில் ஏ.ஐ (AI) எனப்படும் நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால், யானைகள் வனத்திலிருந்து வெளியேறி ரயில் பாதை அருகே வரும் போது அலாரம் மற்றும் எச்சரிக்கை செய்தி வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சென்று விடும்.
இதனை அடுத்து வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் ரயில் பாதையை கடக்க உதவி செய்வதால் யானைகள் ரயிலில் அடிபடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கேரள மாநிலம் வாளையாறு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே பெண் யானை ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்றது.
அப்போது பாலக்காட்டிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ‘சென்னை மெயில் எக்ஸ்பிரஸ்’ ரயில் யானை மீது மோதியது. அதில், யானையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், அந்த யானை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள நீரோடைக்கு சென்றது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர்.
ஆனால், ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில்;- கடந்த 20 ஆண்டுகளில் பாலக்காடு – மதுக்கரை இடையே ரயிலில் அடிபட்டு 35-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.
வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் ரயில் பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது அதிவேகமாக வரக்கூடிய ரயில்கள் மோதுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில், ஒரு சில ரயில் ஓட்டுநர்கள் இதனை கடைப்பிடிக்காததால், இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு இடங்களில் யானைகள் ரயில் பாதை கடக்கும் வகையில் உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அதுபோக, ஏ.ஐ எனப்படும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகளில் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கேரள வனப்பகுதிக்குள் யானைகள் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.