தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் உரிமை பறிக்கப்படுகிறது – வைகோ கண்டனம்

0
20
வைகோ

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் உரிமை பறிக்கப்படுகிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

இந்த அறிவிப்பின்படி, தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் ரயிலைச் சார்ந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது வாக்குகளை முழுமையாக செலுத்த இயலாது என்பது மிகவும் பின்னடைவாகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானை ஒருதலைப்பட்சமானது. கண்டனத்துக்குரியது.

வைகோ

இது ரயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்க இயலாது. எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழக ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்க வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here