அருப்புக்கோட்டை அருகே பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த நபர் கைது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின் மகன் தூக்கிட்டு தற்கொலை.
மகனின் உடலை வாங்க தாயார் தேவியை போலீஸ் ஜிப்பில் அழைத்துச் செல்லும் போது ஜிப்பிலிருந்து குதித்து தாயார் உயிரிழப்பு. விருதுநகர் மாவட்டம், அடுத்த அருப்புக்கோட்டை அருகே காந்தி நகரை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் வயது (37).

பாஜக பிரமுகரான பிரிதிவிராஜ் கடந்த 21-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் பின்பக்க வழியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ 2,60,000 பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பணத்தை திருடி கொண்டு தப்பி ஓடிய அந்த மர்ம நபர் குறிஞ்சாங்குளத்தை சேர்ந்த மலர்மன்னன் என்ற மாணிக்கம் வயது (65) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் மேல் பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை வீட்டில் இருந்த போது கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ 70,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் முன் காவல் நிலையத்தில் வைத்திருந்த மலர்மன்னனை பார்ப்பதற்காக அவரது மகன் கர்ணன் வயது (24) சென்றதாகவும், பின்னர் காவல் நிலையத்தில் தனது தந்தையை பார்த்த பின் கர்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மலர்மன்னன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்கு சென்ற மலர்மன்னன் மகன் கர்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்ணன் உடலை கைப்பற்றிய தாலுகா காவல் நிலைய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் கர்ணன் தனது தந்தையை காவல் நிலையத்தில் பார்த்த அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கர்ணன் தற்கொலையில் காவல்துறை காரணம் அல்ல என உறுதி செய்யப்பட்டதை அடுத்து கர்ணனின் தாய் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க சம்மதித்துள்ளனர்.

அப்போது தேவி மற்றும் தேவியின் தாய் உட்பட தேவி உறவினர்களை அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி தனது ஜீப்பில் அழைத்து வந்து உள்ளனர்.
அப்போது அழைத்து வரும் வழியில் பாலவநத்தம் அருகே வந்த போது தேவி வயது (50) போலீஸ் ஜீப்பில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. அதில் தலையில் பலத்த காயம் அடைந்த தேவி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிர் இறந்தார்.

அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிர் இறந்த தேவியின் உறவினர்களுடன் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரஸ்கான் அப்துல்லா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தையில் நாளை விருதுநகர் மாவட்ட நீதிபதி முன்பு தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் சமரசம் செய்தனர்.

மகனின் உடலை வாங்குவதற்காக காவல்துறையினரின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.