கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு பண்டல் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
வீசி சென்றவர் மீது அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடியல் பயணம் திட்டத்தினால் பேருந்தில் பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மார்ச் மாதத்தில் மட்டுமே தினசரி 55 லட்சம் பெண்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணித்ததாக தெரிவித்துள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு கொண்டு வரப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்து இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே தினசரி சராசரியாக 55 லட்சம் பெண்கள் விடியல் பயணம் மூலமாக பயன்பெற்று இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 49 லட்சம் பெண்கள் பயணித்து இருக்கிறார்கள்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த மே 9 வரை 468 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மாநகர பேருந்துகளில் தினசரி 1.76 கோடி பேர் பயணித்தது புதிய மைல் கல் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில், இலவச பெருந்து திட்டம் மூலம் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் பயன் தருவதாகவும் இதனால் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமித்து, அதனை வைத்து அவர்கள் விலையேற்றத்தை சமாளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை பயன்படுத்துவோரில் 60% பேர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் 80% பேர் எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் சூழ்நிலையில் , கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு மொத்தமாக தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் எடுத்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டில் 100 பேர் பயணம் செய்யக்கூடிய டிக்கெட் இருக்கும். ஆனால் இந்த டிக்கெட் பண்டலில் மகளிருக்கு 46 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீது டிக்கெட்டுகள் அப்படியே 47 முதல் 100 வரை பண்டலாக உள்ளது.

அரசின் முக்கிய திட்டங்களில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு முக்கியத்துவம் வாய்ந்துள்ள நிலையில் அணைக்கரை பாலத்தில் பாதி டிக்கெட் அப்படியே கிடப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது.
மேலும் யாரோ ஒரு நடத்துனர் பயணச்சீட்டை தூக்கி வீசி சென்றாரா அல்லது நடத்துனரிடம் இருந்து பயணச்சீட்டை திருடி யாராவது வீசினார்களா என்பதை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.