விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா,
பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு
சதவீதம் 82.47 ஆகும்.

இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர்.

பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், பூட்டி சீல் வைத்தார். இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு,

ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.