தனியார் ‘டிவி’ தொகுப்பாளினியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரில், காளிகாம்பாள் கோவில் குருக்கள் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண், சென்னை சாலிகிராமத்தில் தங்கி, தனியார் ‘டிவி’யில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.
அவர், பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள, காளிகாம்பாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த கோவிலின் குருக்கள் கார்த்திக்,42 என்பவர், 2021-ல் அறிமுகமாகி, நன்கு பழகி உள்ளார்.

அந்த பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கோவிலில் இருந்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். சாலிகிராமத்தில் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கார்த்திக், தீர்த்தம் என கூறி மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
மயக்கம் தெளிந்து அந்த பெண் கார்த்தியிடம் கேட்ட போது, தன் மனைவியை விவகாரத்து செய்யப் போவதாகவும், இருவரும் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்ந்தால் தன் ஆன்மிக சக்தி அதிகரிக்கும் எனவும் கார்த்திக் கூறியுள்ளார்.

பின் காளிகாம்பாள் கோவிலில் பூஜை செய்து எடுத்து வரப்பட்டதாக கூறி, அந்த பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார். பின் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அந்த பெண் கர்ப்பமானார். ஜாதகப்படி தற்போது குழந்தை பெற்றுகொள்ளக் கூடாது என, கூறி, கருவை கலைக்க வைத்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு மிகவும் பிரபலமான இன்னொரு ‘டிவி’ சேனலில் வேலை வாங்கித் தருவதாக, வி.ஐ.பி., ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என, கார்த்திக் கட்டாயப்படுத்தி உள்ளார்.

இணங்காவிட்டால், மொபைல் போனில் எடுக்கப்பட்ட அந்தரங்க காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த பெண், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தார்.

சென்னை மதுரவாயலில் உள்ள, விருகம்பாக்கம் மகளிர் போலீசார், கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அவர் வெளிநாட்டிற்கு தப்பி விடாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.
கார்த்திக் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு அவரை நேற்று கைது செய்தனர்.