வடலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் மோதி சிறுமி மற்றும் பெண் பூ வியாபாரி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த தெற்கு செப்பாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா செல்வம். இவரது மனைவி சரண்யா. இவர் விவசாய வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் யாழினி மந்தாரகுப்பத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ராஜா செல்வம் தனது மகள் யாழினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமலிங்க மனைவி கம்சலா வயது 52. இவர் பூ வியாபாரி. ராஜா செல்வம் தனது மகள் யாழினி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கம்சலா என்ற பூ வியாபாரி அமந்தாரக்குப்பம் வரை நானும் வருகிறேன் எனக் கூறி, இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மூவரும் இருசக்கர வாகனத்தில் மந்தாரக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சேப்பாளநந்தம் நந்தம் வடக்கு வி.ஏ.ஓ அலுவலகம் அருகே வந்த போது எதிரே சாலை பணிக்காக தண்ணீர் எடுத்து செல்லும் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த ராஜா செல்வம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே யாழினி, கம்சலா ஆகிய இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ராஜா செல்வம் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யாழினி கம்சலா ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ராஜா செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜா செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சிறுமியை அழைத்துச் விபத்தில் பெண்ணுடன் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.