திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுத்தை அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது. அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் தாக்கியது.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் கார் ஷெட்டில் சிறுத்தைக்கு மிக அருகில் 5 பேர் இருந்தனர்.
அவர்கள் உடனடியாக பழுதாகி இருந்த ஒரு காரில் சென்று கதவை மூடிகொண்டனர் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையினர், வனத்துறையினரும் காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

அதில் சாமி ஜி வாட்ச்மேன், வெங்கடேசன்,அஸ்கர், தினகரன், இம்ரான் ஆகியோர் எவ்வித பாதிப்புமில்லாமல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதற்காக கூண்டுகளும் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக இருப்பதால் அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். சிறுத்தை பிடிக்க தீவிர நடவடிக்கையில் வனத்துறையினர் இரவிலும் பணியை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மக்கள் சிறுத்தையின் காரணமாக அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை பிடிபட்டாலே மக்கள் நிம்மதியடைவார்கள் என்றார்கள்.